நெல்லையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


நெல்லையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:25 PM GMT (Updated: 26 Feb 2021 11:25 PM GMT)

டீசல் விலையை குறைக்கக்கோரி நெல்லையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நெல்லை, பிப்.27-
டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், காப்பீட்டு உயர்வை குறைக்க வேண்டும். வாகன கழிவு கொள்கையை ரத்து செய்ய வேண்டும், உதிரிபாகங்கள் செலவு அதிகரிப்பை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் நேற்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்த நிலையில் நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் வேணி பி.பாலசுப்பிரமணியன், செயலாளர் முருகப்பெருமாள், பொருளாளர் வெங்கடாசலம், நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிள்களில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தினசரி டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறியுள்ளனர்.

Next Story