அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 27 Feb 2021 5:15 PM GMT (Updated: 27 Feb 2021 5:15 PM GMT)

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

விடிய விடிய கிரிவலம்

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 3.50 மணியளவில் தொடங்கி இன்று மதியம் 2.45 மணிக்கு நிறைவடைந்தது. புதிய வகை கொரோனா பரவுவதால் இந்த பவுர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

இருப்பினும் நேற்று பகலில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  அதிகாலை வரை விடிய, விடிய கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

பக்தர்கள் அலைமோதல்

நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் பவுர்ணமியை முன்னிட்டு  அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு  கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story