வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது


வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 27 Feb 2021 5:46 PM GMT (Updated: 27 Feb 2021 5:46 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் கார்த்திகா ஆலோசனை நடத்தினார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் கார்த்திகா ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்டறியபட்டன.
கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:- 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் 1,050 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது. துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கம், வாக்குச்சாவடிகள் இட மாற்றம் மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் குறித்த முன்மொழிவுகள் தயார் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1,817 வாக்குச்சாவடிகள்
அதன்படி சட்டமன்ற தொகுதி வாரியாக பாலக்கோடு-337, பென்னாகரம்-357, தர்மபுரி-385, பாப்பிரெட்டிப்பட்டி-376, அரூர் (தனி)-362 என மொத்தம் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, துணை வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நாசீர் இக்பால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story