போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை


போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2021 6:01 PM GMT (Updated: 27 Feb 2021 6:01 PM GMT)

மின் ஊழியர் மானபங்கப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் லேனா(வயது 25). பட்டதாரியான இவர் கடந்த 25-ந் தேதி தனது பாட்டி வீடான கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்திற்கு சென்று விட்டு, மீண்டும் ஆனத்தூருக்கு புறப்பட்டார். அப்போது சிறுகிராமத்தை சேர்ந்த மின் ஊழியரான கந்தசாமி (28) என்பவர் லேனா வை வழிமறித்து மானபங்கப்படுத்தி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

தற்கொலை 

இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் லேனா புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, அவரது தந்தை பாலகிருஷ்ணன், உறவினர்களான பிரபு என்கிற ராமச்சந்திரன், தொட்டி மேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து லேனாவின் வீட்டிற்கு சென்று அவரை திட்டியதாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த லேனா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story