மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி தள்ளியதில் 10 பேர் காயம்


மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு  காளைகள் முட்டி தள்ளியதில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Feb 2021 6:32 PM GMT (Updated: 27 Feb 2021 6:32 PM GMT)

மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காளைகள் முட்டி தள்ளியதில் 10 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள மங்களாபுரம் கருப்பர்கோவில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கருப்பர்கோவில் அருகில் உள்ள திடலில் இரட்டை தடுப்புகளுடன் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கு திருவரங்குளம் வட்டார மருத்துவமனை சார்பில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிேசாதனை செய்து தகுதியானவர்களை வாடிவாசலுக்கு அனுப்பினர். பின்னர் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 
இதில் 300 மாடுபிடி வீரர்கள் நான்கு அணியாக கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 510 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
10 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவில்லை. 
இதில் தாசில்தார் பொன்மலர், வருவாய் அலுவலர் பிரகாஷ், அரசு அதிகாரிகள் மற்றும் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில், ஆலங்குடி சம்பட்டி விடுதி, வடகாடு, கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மங்களாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story