பணம் மோசடி செய்து கைதானவர் ஜாமீனில் வந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு சாலைமறியல்


பணம் மோசடி செய்து கைதானவர் ஜாமீனில் வந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு சாலைமறியல்
x
தினத்தந்தி 27 Feb 2021 10:28 PM GMT (Updated: 27 Feb 2021 10:28 PM GMT)

விஜயமங்கலம் அருகே பணம் மோசடி செய்து கைதானவர் ஜாமீனில் வந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டார்கள்.

பெருந்துறை
விஜயமங்கலம் அருகே பணம் மோசடி செய்து கைதானவர் ஜாமீனில் வந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டார்கள். 
வீடுகட்டி தருவதாக மோசடி
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 34). இவர் தன்னுடைய நிறுவனம் சார்பில் தாசம்பாளையம் பகுதியில் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி வீடும் கட்டிக்கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை என்று தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சண்முகம் மீது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தார்கள். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சண்முகம் ஜாமீனில் வெளியே வந்து தாசம்பாளையத்தில் தங்கியிருந்தார். 
சாலைமறியல்
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சண்முகம் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. அதைத்தொடந்து அவர்கள் மூங்கில்பாளையம் ஊராட்சி தலைவர் அருணாசலம் தலைமையில் தாசம்பாளையம் சென்றனர். பின்னர் சண்முகத்தின் வீட்டுக்கு அருகே செல்லும் ரோட்டில் அமர்ந்துகொண்டு எங்கள் பணத்தை திரும்ப தரவேண்டும் என்று கூறி சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இதுபோல் செய்யக்கூடாது என்று போலீசார் போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்கள்.  

Next Story