சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி திடீர் சாவு


சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி திடீர் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2021 3:39 AM GMT (Updated: 28 Feb 2021 3:39 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி திடீர் சாவு.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் வந்தது. அதில் இதய நோயாளியான டாக்காவைச் சோ்ந்த சலினாபேகம் (வயது 53) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது மகன், மகள் ஆகியோருடன் வந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சலினாபேகத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிப்பதை கண்ட விமான பணிப்பெண்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவித்தனா். அவர் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமான நிலைய மருத்துவ குழுவினா் சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தயாா் நிலையில் இருந்தனா். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினா் விமானத்தில் ஏறி சலினாபேகத்தை பரிசோதித்தனா். ஆனால் அவா் இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்து இருந்தாா். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலைய போலீசாா், சலினாபேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பிரேத பரிசோதணைக்கு பிறகு அவரது உடல் சரக்கு விமானத்தில் மீண்டும் வங்காளதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Next Story