மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்


மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 28 Feb 2021 5:50 AM GMT (Updated: 28 Feb 2021 5:50 AM GMT)

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அருள்மிகு தலசயன பெருமாள் மற்றும் வராக பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் கருட சேவையில் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர். அப்போது கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

அதன் பின்னர், தலசயன பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர். மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடினால் காசி, ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மாசிமக விழாவை கண்டு களிப்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

இதனால் ஏராளமான போலீசார் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈபட்டனர். விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம், கோயில் செயல் அலுவலர் எஸ்.சங்கர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story