தொப்பூர் சோதனைச்சாவடியில் காரில் எடுத்து சென்ற ரூ.2.95 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


தொப்பூர் சோதனைச்சாவடியில் காரில் எடுத்து சென்ற ரூ.2.95 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2021 5:55 PM GMT (Updated: 28 Feb 2021 6:00 PM GMT)

தொப்பூர் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் எடுத்து சென்ற ரூ.2.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரி,

தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்திவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் தொப்பூர் சோதனைச்சாவடியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பணத்தை எடுத்து வந்தவர் திருப்பத்தூர் எழில் நகரை சேர்ந்த சிவன் (வயது 43) என்பது தெரியவந்தது. பேக்கரி உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வரும் இவர் சேலத்தில் விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் ரூ.2.95 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி கலெக்டர் பிரதாபிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் அவர் விசாரணை நடத்தினார். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ 2.95 லட்சம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story