மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு உதவி திட்ட அலுவலர் பணியிடை நீக்கம் 5 ஊழியர்கள் பணி நீக்கம்


மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்பட்ட  நிதியில் முறைகேடு உதவி திட்ட அலுவலர் பணியிடை நீக்கம் 5 ஊழியர்கள் பணி நீக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2021 6:19 PM GMT (Updated: 28 Feb 2021 6:19 PM GMT)

நிதியில் முறைகேடு உதவி திட்ட அலுவலர் பணியிடை நீக்கம்

பெரம்பலூர்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காகவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி மற்றும் நிதி உதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார். சம்பந்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் வங்கி கணக்கில், அந்த தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு பிறகு, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம், வட்டார இயக்க மேலாளர்கள் அஞ்சுகம், ரமேஷ், நதியா, இளமதி ஆகியோர் அந்த மகளிர் சுய உதவி குழுவினரை தொடர்பு கொண்டு பேசி, உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது எனக்கூறி, அவர்களிடம் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகன் மேற்கொண்ட விசாரணையில், உதவி திட்ட அலுவலர் மோகன்ரவி உத்தரவின்பேரில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட உதவித் திட்ட அலுவலர் மோகன்ரவியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலா உத்தரவிட்டார். மேலும், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ரமேஷ், அஞ்சுகம், நதியா, இளமதி ஆகிய 5 ஊழியர்களை பணி நீக்கம் செய்து திட்ட இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார். அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story