ஆட்டோவில் விவசாயி கொண்டு சென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல்


ஆட்டோவில் விவசாயி கொண்டு சென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2021 7:48 PM GMT (Updated: 2 March 2021 7:48 PM GMT)

பெரம்பலூர் அருகே ஆட்டோவில் உரிய ஆவணங்கள் இன்றி விவசாயி கொண்டு சென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

வாகன சோதனை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பாலதண்டாயுதபாணி மலை அடிவாரம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு சிவகுமார் உள்ளிட்டோர் அடங்கிய நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, சோதனை நடத்தினர்.
ரூ.99 ஆயிரம் பறிமுதல்
அப்போது ஆட்டோவில் வந்தவரிடம் ரூ.99 ஆயிரம் இருந்தது, தெரியவந்தது. இது குறித்து அவரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், ெபரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தை சேர்ந்த விவசாயியான அசோகன் என்பதும், பசுமாடுகள் வாங்கிய வகையில் பணம் கொடுப்பதற்காக நேற்று காலை செட்டிகுளத்திற்கு ரூ.99 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வாடகை ஆட்டோவில் சென்றதும், தெரியவந்தது.
ஆனால் அசோகனிடம், அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம்  பெரம்பலூரில் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Next Story