ஆடு மேய்த்ததில் தகராறு: மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


ஆடு மேய்த்ததில் தகராறு: மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 March 2021 9:28 PM GMT (Updated: 10 March 2021 9:28 PM GMT)

ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு
ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தகராறு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை ஓ.எம்.ஆர். வீதியை சேர்ந்தவர் சின்னத்துரை என்கிற மச்சக்கவுண்டர். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 75). இவருக்கு சொந்தமான தோட்டம் ஊரடி தோட்டத்தில் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த புடான் என்கிற அம்மாசை (65) என்பவர் இந்த தோட்டத்தில் ஆடு மேய்த்து வந்தாக தெரிகிறது. இதுதொடர்பாக மூதாட்டி மீனாட்சிக்கும், புடானுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் புடான் கோபத்தில் இருந்து வந்தார்.
மூதாட்டி கொலை
கடந்த 25-4-2017 அன்று பகல் 11 மணி அளவில் மீனாட்சி தோட்டத்துக்கு வந்தபோது புடான் ஆடு மேய்த்துக்கொண்டு இருப்பதை பார்த்தார். அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த புடான் என்கிற அம்மாசை அவரது கையில் இருந்த அரிவாளால் மீனாட்சியை கொலை செய்யும் நோக்கத்தில் சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மீனாட்சியின் மகன் மகேந்திரன் (54) மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் புடான் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மீனாட்சியை மீட்டு ஈரோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மீனாட்சி பரிதாபமாக செத்தார். அவரது உடலில் 36 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன.
20 ஆண்டு ஜெயில்
இதுபற்றிய புகாரின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புடான் என்கிற அம்மாசையை கைது செய்தனர். இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் மூதாட்டி மீனாட்சியை வெட்டி கொலை செய்த குற்றத்துக்காக புடான் என்கிற அம்மாசைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

Next Story