டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2021 7:17 AM GMT (Updated: 11 March 2021 7:19 AM GMT)

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

துடியலூர்,

கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி திருவள்ளுவர் நகர் அருகே பிருந்தாவன் நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. 

இந்த நிலையில் அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி)  அமைப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கூடாது என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பணி நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் அதே இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி  அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கணுவாய் தடாகம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு தடாகம் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், உதவி பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் சென்று விரைவில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story