அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற தந்தை- மகன் உள்பட 4 பேர் கைது; கார், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற தந்தை- மகன் உள்பட 4 பேர் கைது; கார், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2021 10:10 PM GMT (Updated: 11 March 2021 10:10 PM GMT)

அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கார், 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

அந்தியூர்
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கார், 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசிய தகவல்
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவர் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் 21 கிலோ கஞ்சா இருந்ததை    கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். 
4 பேர் கைது
விசாரணையில், ‘அவர் தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4-வது குறுக்கு வீதியை சேர்ந்த ஜெயபாண்டியன் (வயது 49) என்பதும், அவருடைய மகன் சிவபாண்டியன் (26), மருமகன் பாண்டி (40), உறவினர் கோவிந்தராஜ் (38) ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் முறுக்கு வியாபாரம் செய்து வந்ததுடன், கஞ்சா விற்பனை செய்து வந்ததும்,’ தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து ஜெயபாண்டியனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெயபாண்டியன் கொடுத்த தகவலின் பேரில் சிவபாண்டியன், பாண்டி, கோவிந்தராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்ததுடன், கஞ்சா விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story