குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா?


குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா?
x
தினத்தந்தி 12 March 2021 6:32 PM GMT (Updated: 12 March 2021 6:32 PM GMT)

சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொள்ளிடம்:
சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம் பாலம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடிக்கும் வல்லம்படுகை கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பாலத்தில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்து வரும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இரவு- பகல் தொடர்ந்து இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
 எந்த நேரமும் தொடர்ந்து வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலம் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த பாலத்தில் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டு வலிமையாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் போடப்பட்டது. தற்போது தார் பெயர்ந்து பாலம் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. 
அடிக்கடி விபத்து
இந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் கீழே விழுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொள்ளிடம் ஆற்று பாலம் முழுவதும் வலிமையான கான்கிரீட் மற்றும் கருங்கல் ஜல்லி பயன்படுத்தப்பட்டு வலிமையாக கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமாக இருப்பதை சரி செய்ய சிமெண்டு கான்கிரீட்டை பயன்படுத்தி சரி செய்ய வேண்டும்.
 ஆனால் பாலத்தின் நடுவே ஏற்படும் சிறு சிறு பள்ளங்களை சரி செய்வதற்காக தார் போடப்பட்டுள்ளதால் இவைகள் அப்படியே பெயர்ந்து அடிக்கடி பாலத்தில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகி வருகிறார்கள்.
சீர்செய்யப்படுமா?
எனவே பாலத்தில் தரத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் பாலத்தில் உள்ள குண்டும் குழியுமாக இருப்பதை சரிசெய்யும் வகையிலும் பாலத்தின் மேற்பரப்பை சிமெண்டு கான்கிரீட் கலவையை கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தை பழுது பார்க்கும் வகையில் சிமெண்டு, ஜல்லி பயன்படுத்தி கான்கிரீட் அமைக்க தவறினால் பல ஆண்டுகளாக வலிமையாக இருந்து வரும் இந்த பாலம் மிக விரைவில் வலிமை குன்றி் போகும் நிலை ஏற்பட்டு விடும்.
எனவே கொள்ளிடம் பாலத்தை பாதுகாக்கும் வகையில் பாலத்தின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள குண்டும், குழியுமாக இருப்பது சீர்செய்யப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story