வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 15 March 2021 7:02 PM GMT (Updated: 15 March 2021 7:02 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, மார்ச்.16-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவிற்கு மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 புதுக்கோட்டையில் கீழ ராஜவீதியில் கனரா வங்கி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுசெயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை என சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை பாதிப்படைந்தது.
திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Next Story