கலெக்டர் அலுவலகத்தை வேட்பாளருடன் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை வேட்பாளருடன் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2021 8:16 PM GMT (Updated: 16 March 2021 8:16 PM GMT)

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை வேட்பாளருடன் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

தேர்தல் பிரசார காட்சிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மதியம் திடீரென்று தனது கட்சியினருடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் கூறுகையில், குன்னம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோ தேர்தல் பிரசார காட்சிகளை ஒளிபரப்பு செய்ய பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தில் கட்சி சார்பில் கடந்த 12-ந்தேதி அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம்.
அனுமதி தராமல் இழுத்தடிப்பு
ஆனால் அதற்கு அனுமதி தராமல் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு மைய அதிகாரிகள் இழுத்தடித்து வருவததோடு, எங்கள் கட்சியினரை அலைக்கழித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) அந்த மையத்திற்கு வந்து கேட்டபோது, 40 நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளை ஆடியோவாகவும், வாசகங்களை தட்டச்சு செய்து வருமாறும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களில் 5 பேரை மட்டும் தேர்தல் அதிகாரியை சந்திக்க அனுமதித்தனர். அவர்களும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Next Story