வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 March 2021 3:27 PM GMT (Updated: 24 March 2021 3:30 PM GMT)

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது. பின்னர் ஊட்டியில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் இருந்து அந்தந்த தொகுதிகளுக்கு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஊட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்ஸ் பள்ளி பாதுகாப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கிடங்கின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அங்கு தற்காலிக ஷெட் அமைத்து போலீசார் துப்பாக்கி ஏந்தி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளதால், 

கண்காணிப்பு கேமராக்கள், வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 தொகுதிகளுக்கு 1,042 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,042 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,147 வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 231 எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதில் வாக்குப்பதிவு எந்திரம் 120 சதவீதம், கட்டுப்பாட்டு எந்திரம் 120 சதவீதம், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரம் 132 சதவீதம் உள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக வழிமுறைகளை கடைபிடிக்க நீலகிரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.  அதற்கு ஏற்றவாறு எந்திரங்கள் எண்ணிக்கையும் போதுமான அளவில் உள்ளன.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story