தேர்தல் பயிற்சி மையங்கள், தபால் வாக்கு வழங்கும் இடங்கள் மாற்றம்


தேர்தல் பயிற்சி மையங்கள், தபால் வாக்கு வழங்கும் இடங்கள் மாற்றம்
x
தினத்தந்தி 29 March 2021 6:44 PM GMT (Updated: 29 March 2021 6:44 PM GMT)

தேர்தல் பயிற்சி மையங்கள், தபால் வாக்கு வழங்கும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் 2-ம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருகின்ற 31 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ராமநாதபுரம் இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதேபோல, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முன்னதாக சி.கே.மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கமுதியில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெற்றன. இந்தநிலையில் திருவாடானை தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் புனித அந்திரேயா பள்ளிகளிலும், முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியிலும் நடைபெறும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம், அறை எண், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் உத்தரவு வழங்கப்படும். தபால் வாக்கு கோரிய தேர்தல் பணியாளர்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வருகிற 31-ந்தேதி மற்றும் ஏப்ரல் 5-ந் தேதி ஆகிய இரு நாட்களிலும் பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரடியாக செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மே 1-ந்தேதி வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story