மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நெசவாளர்களுக்கு பசுமைவீடு, இலவச பெடல்தறி, கடன் தள்ளுபடி - ஏ.லோகிராஜன் வாக்குறுதி


மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நெசவாளர்களுக்கு பசுமைவீடு, இலவச பெடல்தறி, கடன் தள்ளுபடி - ஏ.லோகிராஜன் வாக்குறுதி
x
தினத்தந்தி 30 March 2021 11:23 AM GMT (Updated: 30 March 2021 11:23 AM GMT)

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நெசவாளர்களுக்கு பசுமைவீடு, இலவச பெடல்தறி மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும் என்று ஆண்டிப்பட்டி வேட்பாளர் ஏ.லோகிராஜன் அறிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.லோகிராஜன் நேற்று ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்தார். திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:&
ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க.வின் வெற்றியில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். முன்னாள் முதல்&அமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே பெற்ற வெற்றியில் நெசவாளர்களின் பங்களிப்பும் அடங்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் வந்த முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள நெசவாளர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் அடிப்படையில் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், இலவச பெடல் தறிகள், மாதத்திற்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம், கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள் பெற்றுள்ள ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

எப்படியும் அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி அமைய போகிறது. ஆகவே நான் வெற்றி பெற்றவுடன், முதல்&அமைச்சர் அறிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் நெசவாளர்களுக்கு பெற்றுத் தருவேன். எனவே நெசவாளர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஏ.லோகிராஜன் பேசினார்.

முன்னதாக பாலக்கோம்பையை சேர்ந்த தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர் துரைமுருகன், தேக்கம்பட்டி தே.மு.தி.க கவுன்சிலர் பவானிபெருமாள் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி ஏ.லோகிராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை லோகிராஜன் வரவேற்றார். 
பிரசாரத்தில் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என்.வரதராஜன், ஒன்றிய துணைசெயலாளர் அமரேசன், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பொன்முருகன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story