பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையாளர்கள் 288 பேர் தேர்வு கலெக்டர் ராமன் தகவல்


பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையாளர்கள் 288 பேர் தேர்வு கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 30 March 2021 11:19 PM GMT (Updated: 30 March 2021 11:19 PM GMT)

தேர்தல் நுண்பார்வையாளர்கள் 288 பேர் தேர்வு

சேலம்:
சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சட்டசபை தேர்தல்
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டிய தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பணிபுரியக்கூடிய 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 11 வாக்குச்சாவடிகளுக்கு 13 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆத்தூர் தொகுதியில் பதற்றமான 13 வாக்குச்சாவடிகளுக்கு 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், ஏற்காடு தொகுதியில் பதற்றமான 28 வாக்குச்சாவடிகளுக்கு 34 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நுண்பார்வையாளர்கள்
ஓமலூரில் 18 வாக்குச்சாவடிகளுக்கு 22 பேரும், மேட்டூரில் பதற்றமான 34 வாக்குச்சாவடிகளுக்கு 41 பேரும், எடப்பாடியில் பதற்றமான 14 வாக்குச்சாவடிகளுக்கு 17 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். சங்ககிரி தொகுதியில் பதற்றமான 8 வாக்குச்சாவடிகளுக்கு 10 தேர்தல் நுண்பார்வையாளர்களும், சேலம் மேற்கு தொகுதியில் பதற்றமான 43 வாக்குச்சாவடிகளுக்கு 52 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று சேலம் வடக்கு தொகுதியில் பதற்றமான 19 வாக்குச்சாவடிகளுக்கு 23 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் பதற்றமான 19 வாக்குச்சாவடிகளுக்கு 23 பேரும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 31 வாக்குச்சாவடிகளுக்கு 37 பேரும் என மொத்தம் 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story