கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்


கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 1 April 2021 5:57 PM GMT (Updated: 1 April 2021 5:57 PM GMT)

சிங்கம்புணரி அருகே கண்மாயில் இறங்கி கிராம மக்கள் மீன்களை அள்ளினர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கண்மாயில் இறங்கி கிராம மக்கள் மீன்களை அள்ளினர்.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட சின்னகுட்டையன்பட்டி பகுதியில் கோட்டை மலை அடிவாரத்தில் கீழ்சந்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மழைநீராலும், பெரியார் உபரிநீர் காரணமாகவும் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த கண்மாயை சுற்றி 130-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
கடந்த ஆண்டு கண்மாய் தூர்வாரியதால் தண்ணீர் தேங்கி நின்றது. அதன்பிறகு போதிய மழை இல்லாததால் கண்மாயில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து நேற்று அந்த கண்மாயில் மீன்பிடி திருவிழா கொண்டாடப்பட்டது.

மீன்களை அள்ளிய கிராம மக்கள்

இதில் சின்னகுட்டையன்பட்டி, சொக்கலிங்கபுரம், சுக்காம்பட்டி, ஆலம்பட்டி, ஆவாரங்காடு, வஞ்சி நகரம், வஞ்சிப்பட்டி, கருங்காலக்குடி, துவரங்குறிஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கண்மாயில் இறங்கி வலைகளை விரித்து மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கைகளில் சிக்கிய மீன்களை உற்சாகத்துடன் காண்பித்து ஆரவாரம் செய்தனர். இதில் கெழுத்தி, கெண்டை, அயிரை, கெண்டை பொடி, ஜிலேபி உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்தன. பின்னர் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டிற்கு சென்று சமையல் செய்து சாப்பிட்டனர்.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் செயலாளர் தினேஷ் பொன்னையா, பொருளாளர் அருள் ஆகியோர் செய்திருந்தனர்.

உதவும் மனப்பான்மை

இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது குறித்து பொறுப்பாளர்கள் கூறும் போது, கண்மாய் உள்ளிட்டவைகளில் காணப்படும் மீன்கள் அதிக சத்து நிறைந்தவை. இந்த மீன்கள் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இந்த மீன்பிடி திருவிழா நடத்துவதன் மூலம் மழை பெய்து கண்மாய் நிரம்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதோடு கண்மாயில் கிராம மக்கள் இறங்கி மீன்களை தேடும் போது ஒருவருக்கு மீன் கிடைக்காவிட்டால் அவருக்கு மீன்களை பிடித்து கொடுப்பது என மற்றொருவர் கண்மாயில் இறங்கி தேடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகளால் கிராம மக்களிடையே உதவும் மனப்பான்மை வளர்கிறது என்றனர்.
திருவிழா முடிந்த பின்னர் மாலையில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story