சூறாவளி காற்றுடன் பலத்த மழை


சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 1 April 2021 6:44 PM GMT (Updated: 1 April 2021 6:44 PM GMT)

விராலிமலை அருகே விளாப்பட்டி, பொன்னமராவதி, கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஆவூர், ஏப்.2-
விராலிமலை அருகே விளாப்பட்டி, பொன்னமராவதி, கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கடும் வெயில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனல் காற்றுவீசியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கடும் அவதி அடைந்தனர்.
கொளுத்தும் வெயில்காரணமாக பகல் நேரத்தில் வேட்பாளர்கள் பிரசார நேரத்தை குறைத்துக்கொண்டனர். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரத்தில் அனல்காற்று வீசியது. இந்நிலையில் விராலிமலை அருகே விளாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணிநேரம் பெய்தது.
இதேபோல் மாங்குடி, மருதம்பட்டி, நாங்குப்பட்டி, பையூர், பின்னங்குடிப்பட்டி மேட்டுப்பட்டி, வெம்மணி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் சாலையோரம் மற்றும் வயல் வெளிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொன்னமராவதி
இதேபோல் பொன்னமராவதி கொப்பனாபட்டி, ஆலவயல், ஏனாதி, பிடாரம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. இந்த மழையால் மா, பலா, கொய்யா, தென்னை மற்றும் விவசாய பயிர்களுக்கு  நீராதாரம் கிடைத்துள்ளது.
கீரனூர்
கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் கீரனூரில் உள்ள திருச்சி-புதுக்கோட்டை சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, ஐஸ் கட்டி மழையும் பெய்தது. ஐஸ்கட்டி மழையை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த மழை சுமார் அரை மணிநேரம் பெய்தது.

Next Story