பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்


பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2021 8:17 PM GMT (Updated: 1 April 2021 8:17 PM GMT)

பெரம்பலூரில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

பயிற்சி வகுப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 1, 2-ம் நிலை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பெரம்பலூர் தொகுதிக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேலும் வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் பயன்படுத்த உள்ள செல்போன் செயலி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இருந்து 525 வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி...
அவர்களில் பெரம்பலூரில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சிலர் பயிற்சி வகுப்பு முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், செந்துறை ஒன்றியத்தில் இருந்து பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு, தேர்தலன்று வாக்குச்சாவடிக்கு செல்லவும், தேர்தல் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு செல்வதற்கும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பயணப்படி கூடுதலாக வழங்க வேண்டும். இனிவரும் தேர்தலுக்கு பயிற்சி வகுப்புகளை எங்கள் பகுதியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 5-ந்தேதி நடைபெறவுள்ளது.

Next Story