வடக்கன்குளத்தில் பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு


வடக்கன்குளத்தில் பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 8 April 2021 6:49 PM GMT (Updated: 8 April 2021 6:49 PM GMT)

வடக்கன்குளத்தில் பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

ராதாபுரம், ஏப்:
வடக்கன்குளம்-ராதாபுரம் ரோடு டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் முட்புதர்களுக்கு இடையே நேற்று காலையில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கிடந்தது. அந்த பெண் சிவப்பு நிற சேலை அணிந்து இருந்தார். அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற ஒருவர், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வடக்கன்குளத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி ஜேசம்மாள் (வயது 75) கடந்த 2-2-2021 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானதும், இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஜேசம்மாளின் உறவினர்களை வரவழைத்த போலீசார், அங்கு இறந்து கிடந்தது ஜேசம்மாள் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஜேசம்மாளின் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜேசம்மாள் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story