மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் வாலிபர் பலி
x
தினத்தந்தி 8 April 2021 6:50 PM GMT (Updated: 8 April 2021 6:50 PM GMT)

மடத்துக்குளத்தில் தந்தை கண் முன்னே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

மடத்துக்குளம்
மடத்துக்குளத்தில் தந்தை கண் முன்னே மோட்டார் சைக்கிள் மீது  லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
லாரி மோதல்
மடத்துக்குளம் அருகே உள்ள  ரெட்டியாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் பால தெண்டபாணி விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று பாலதெண்டபாணியும்,  அவருடைய தந்தையும்,  ஒரு மோட்டார் சைக்கிளில் மடத்துக்குளம் வந்தனர். மோட்டார் சைக்கிளை பாலதெண்டபாணி ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய தந்தை சுப்பிரமணியம் அமர்ந்து இருந்தார். 
அவர்களுடைய மோட்டார் சைக்கிள்  மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்ததும்,  சுப்பிரமணியத்தை மோட்டார் சைக்கிளில் இருந்து பாலதெண்டபாணி இறக்கி விட்டார்.  பின்னர் சிறிது நேரத்தில் வருவதாக தனது தந்தை சுப்பிரமணியத்திடம் கூறி விட்டு,  பாலதெண்டபாணி  மோட்டார் சைக்கிளை திருப்பினார். சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில்  பழனி உடுமலை சாலையில் பழனியில் இருந்து உடுமலை நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பால தெண்டபாணி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில்  பாலதெண்டபாணி பலத்த காயம் அடைந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுப்பிரமணியம் ஓடி வந்து   ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவசர அவசரமாக அருகில் இருந்த ஆம்புலன்ஸ்ஸை வர வழைத்து, மகனை  ஏற்றிக்கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு  பால தெண்டபாணியை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பாலதெண்டபாணியின் உடலை பிரதே பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து  மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஒட்டி வந்து விபத்தினை ஏற்படுத்திய, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சார்ந்த, டிரைவர் முருகனை  கைது செய்தனர்.  பின்னர் அந்த, லாரியையும் பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story