அம்மாபேட்டை அருகே மேட்டூர் வலதுகரை வாய்க்கால் புனரமைக்கும் பணி தீவிரம்


அம்மாபேட்டை அருகே மேட்டூர் வலதுகரை வாய்க்கால் புனரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2021 9:43 PM GMT (Updated: 8 April 2021 9:43 PM GMT)

அம்மாபேட்டை அருகே மேட்டூர் வலதுகரை வாய்க்கால் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே மேட்டூர் வலதுகரை வாய்க்கால் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வலதுகரை வாய்க்கால்
மேட்டூர் வலது, மற்றும் இடது கரை கால்வாய்த்திட்டம் கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது
இதில் மேட்டூர் வலது கரை பிரதான கால்வாய் 43.20 கி.மீ. தொலைவும், கிளை வாய்க்கால்கள் 58.5 கி.மீ. தொலைவும் உள்ளது. வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் செல்லும் வகையில் வெட்டப்பட்ட இவ்வாய்க்கால் கரைகள் மண்ணால் கட்டப்பட்டதாகும்.
புனரமைக்க முடிவு
இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கரைப்பகுதியில் நீர்க்கசிவு அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் இந்த வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் இருந்து கருங்கரடு வரையில் ரூ.31 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 315 மீட்டர் தொலைவுக்கும், பூதப்பாடி முதல் மயிலம்பாடி வரை 16 ஆயிரத்து 200 மீட்டர் தொலைவுக்கு ரூ.32 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் பக்கச் சுவர்கள் கட்டி லைனிங் செய்ய திட்டமிடப்பட்டது.
பணிகள் தீவிரம்
இந்த பணிகளை கடந்த மாதம் பூமிபூஜை செய்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, வலது கரை வாய்க்கால் சமன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story