புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை


புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 8 April 2021 9:46 PM GMT (Updated: 8 April 2021 9:46 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் கால்நடை சந்தை உள்ளது. இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய சந்தையாக புஞ்சைபுளியம்பட்டி சந்தை விளங்குகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து செல்வார்கள்.
கட்டுப்பாடுகள் நீங்கியது
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால் புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு வர அச்சப்பட்டனர். இதன் காரணமாக வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததால் பறக்கும் படை வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கூடிய புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
ரூ.1 கோடிக்கு விற்பனை
நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை மற்றும் கன்றுக்குட்டிகள் என 600-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு பிடித்து வந்தனர்.
இதில் நாட்டு மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், ஜெர்சி மாடு ரூ.23 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையிலும், சிந்து மற்றும் கலப்பின வகை மாடு தலா ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story