பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பு


பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 9:53 PM GMT (Updated: 8 April 2021 9:53 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி நவீன் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 33). 

இவர், திண்டுக்கல்லில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வெளியே சென்றுவிட்டார். 

அன்று இரவில் நவாஸின் தந்தை அகமதுபாட்சா (54), தாய் மும்தாஜ் பேகம் (52), பாட்டி ஜான் பக்புல் பீவி (75) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 

அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். 

பின்னர் மும்தாஜ் பேகம், ஜான் பக்புல் பீவி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலிகளை பறித்தனர். 

இதனால் திடுக்கிட்டு எழுந்த 2 பேரும் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு கண்விழித்த அகமது பாட்சா கொள்ளையர்களை துரத்தி பிடிக்க முயன்றார்.

 ஆனால் அதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் நவாஸ் புகார் அளித்தார்.

 அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து, பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்.


Next Story