முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 April 2021 8:02 PM GMT (Updated: 9 April 2021 8:02 PM GMT)

முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 94 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 336 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் சுமார் 5 பேருக்கும் குறையாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், வணிக நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பெரம்பலூர் வெங்கடேசபுரம் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கொரோனா பரவலை தடுப்பதில் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த டிரைவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர். முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story