பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்


பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்
x
தினத்தந்தி 10 April 2021 12:51 PM GMT (Updated: 10 April 2021 12:51 PM GMT)

குடியாத்தம் அருகே பயிர்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே பயிர்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு நேற்று  20 காட்டு யானைகள் 3 குழுக்களாக புகுந்து ஏராளமான பயிர்களை சேதப்படுத்தியது. யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு இடையே காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

இந்த நிலையில் மீண்டும் நள்ளிரவில் குடியாத்தம் அருகே கொட்டமிட்டா கிராமம் பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்தது. காசி, தாமோதரன், தனலட்சுமி  ஆகியோர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், கேழ்வரகு ஆகியவற்றை நாசப்படுத்தியது. இதில் பல ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது. 

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த தென்னை மரங்களையும் சாய்த்தது. இதுகுறித்து விவசாயிகள் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர், அதன்பேரில்  வனச்சரகர் சரவணபாபு தலைமையில் வனவர் மாசிலாமணி, வனக்காப்பாளர்கள் பிரபு, வனராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் பல மணி நேரம் போராடி 10 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

அதேபோல் எஸ்.மோட்டூர் அருகே தீர்த்தமலையில் ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்தது அந்த யானையையும் வனத்துறையினர் ஆந்திர மாநில காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

தொடர்ந்து யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story