புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி


புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 10 April 2021 8:22 PM GMT (Updated: 10 April 2021 8:22 PM GMT)

மதுரையில் புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மதுரை
மதுரையில் புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ்
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 158 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 42 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 32 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 1049 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக வார்டுகள் அமைக்கும் பணியும் நடக்கிறது.
காரணம் என்ன?
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மதுரையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது தான். மதுரையில் கடந்த காலங்களில் ஆயிரத்திற்கும் குறைவாக பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதன் காரணமாக தான் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவின் தாக்கம் அனைத்து இடங்களிலும் வெகுவாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. எனவே கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் சுகாதாரப்பணியாளர்கள் பல்வேறு கட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story