விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு


விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 April 2021 2:58 PM GMT (Updated: 11 April 2021 2:58 PM GMT)

விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள பழையபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் குலாம் முகமது. இவரது மனைவி சுபைதா பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுபைதா பேகம், தனது மகள்களுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின் பின்பக்க கதவை நெம்பி திறந்து, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென சுபைதா பேகத்தின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

வலைவீச்சு

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலை  மறைவாகி விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சுபைதா பேகம், ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story