சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 11 April 2021 5:52 PM GMT (Updated: 11 April 2021 6:32 PM GMT)

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாலும், கோடைகாலம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, மணல் திட்டு, ஐந்தருவி வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.  இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ஊட்டமலை, ஆலாம்பாடி, மணல்திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதை பற்றி கவலை கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒகேனக்கல் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story