மாவட்டங்களில் பெய்த கோடை மழை


மாவட்டங்களில் பெய்த கோடை மழை
x
தினத்தந்தி 11 April 2021 7:28 PM GMT (Updated: 11 April 2021 7:28 PM GMT)

சுட்டெரித்த வெயிலுக்கு இடையே நேற்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது. குறிப்பாக ஜெயங்கொண்டத்தில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.

ஜெயங்கொண்டம்:

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசுகிறது. இதையடுத்து வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலும் கடந்த சில நாட்களாகவே சுட்டெரித்த வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்தது.
கனமழை
இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 1 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. தூறலாக தொடங்கிய மழை பின்னர் பலத்து பெய்ய தொடங்கியது. இதையடுத்து இடியுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த சில நாட்களாக வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில், ஜெயங்கொண்டத்தில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடையார்பாளையம்
இதேபோல் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று கோடை மழை பரவலாக பெய்தது. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், முனியத்திரையன்பட்டி, பரணம், நாகல்குழி, வீராக்கன், பிலாக்குறிச்சி, கட்சிபெருமாள், துளாரங்குறிச்சி, சூரியமணல், இலையூர் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் முந்திரி, கடலை, எள்ளு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் கொடுமையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயிலின் அளவு 98.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலையில் பல்வேறு இடங்களில் திடீரென்று கோடை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மண் வாசனை, காற்றுடன் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குன்னம்
குன்னம் பகுதியில் பீல்வாடி, பேரளி, குன்னம், ஓதியம், அசூர், வரகூர், பேரளி, மருவத்தூர், அந்தூர், பரவாய், வேப்பூர், நன்னை, கல்லை, ஓலைப்பாடி, ஆண்டிகுரும்பலூர், கொளப்பாடி, நல்லறிக்கை, கொத்தவாசல், புதுவேட்டக்குடி, காடூர் ஆகிய ஊர்களில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Next Story