தாளவாடி அருகே உணவு, தண்ணீர் தேடி ரோட்டை கடந்த யானைக்கூட்டம்


தாளவாடி அருகே உணவு, தண்ணீர் தேடி  ரோட்டை கடந்த யானைக்கூட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 9:18 PM GMT (Updated: 11 April 2021 9:18 PM GMT)

தாளவாடி அருகே உணவு, தண்ணீர் தேடி யானைக்கூட்டம் ரோட்டை கடந்து சென்றன.

தாளவாடி
தாளவாடி அருகே உணவு, தண்ணீர் தேடி யானைக்கூட்டம் ரோட்டை கடந்து சென்றன.
தண்ணீர், உணவு தேடி...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யானை, மான் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி காட்டை விட்டு வெளியேறுகின்றன. இதற்காக வனப்பகுதி சாலையை வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் கூட்டம், கூட்டமாக கடந்து செல்கின்றன.
ரோட்டை கடந்த  யானைக்கூட்டம்
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து தண்ணீர், உணவு தேடி யானைகள் தங்கள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக வெளியேறின. பின்னர் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தாளவாடி-சிக்கள்ளி ரோட்டை கடக்க தொடங்கின. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
யானைகளை பார்த்ததும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். சிலர் யானைகள் ரோட்டை கடந்து செல்லும் காட்சியை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
வனத்துறையினர்
அப்போது ஒரு யானை வாகன ஓட்டிகளை துரத்த தொடங்கியது. இதனால் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றன. அதன்பின்னரே மற்ற வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதி சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல், கவனத்துடன் செல்ல வேண்டும்’ என்றனர்.

Next Story