மணிமுத்தாறு அணையில் இருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


மணிமுத்தாறு அணையில் இருந்து   முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்   கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 12 April 2021 6:56 PM GMT (Updated: 12 April 2021 6:56 PM GMT)

மணிமுத்தாறு அணையில் இருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு வழங்கினர்.

நெல்லை:
மணிமுத்தாறு அணையில் இருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு வழங்கினர். 

விவசாயிகள் மனு

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு சென்றனர்.
மணிமுத்தாறு அணை 40 அடி பெருங்கால் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் தலைவர் பாபநாசம், செயலாளர் ஆண்டி, பொருளாளர் குமார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு முன்கார் சாகுபடிக்காக மே 1-ந்தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
தற்போது தண்ணீர் திறந்து விடுவதால் பூச்சிநோய் தாக்குதல் குறைந்து காணப்படும். நல்ல மகசூலுடன் உரிய விலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

வாகன ஓட்டுனர்

வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நல முன்னேற்ற சங்கத்தினர் மாநில தலைவர் சந்தோசம் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், ‘வாடகை வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு வசதி செய்து தரவேண்டும். தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா என்ற பட்டனை அகற்றிவிட்டு, அதற்குப்பதில் கவர்னர் ஆட்சி என்பதை குறிப்பிட்டால் 100 சதவீத மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களுக்கு இந்த ஆண்டு சாலை வரி ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story