திண்டுக்கல்லில் சினிமா துணை நடிகர் வீட்டில் திருட்டு


திண்டுக்கல்லில் சினிமா துணை நடிகர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 13 April 2021 3:55 PM GMT (Updated: 13 April 2021 3:55 PM GMT)

திண்டுக்கல்லில் சினிமா துணை நடிகர் வீட்டில் நகை, பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் இ.பி.காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). சினிமா துணை நடிகர். ஒருசில சினிமா படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால், கடந்த சில மாதங்களாக வீட்டில் இருக்கிறார். இவருடைய மனைவி வீட்டுக்கு எதிரே தையல் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி 2 பேரும் தையல் கடையில் இருந்தனர். வீட்டுக்கு எதிரே தையல் கடை இருந்ததால், வீட்டு கதவை பூட்டாமல் தாழ்ப்பாள் மட்டும் போட்டுள்ளனர்.
மேலும் தையல் கடையில் இருந்தபடி அவ்வப்போது வீட்டை பார்த்து கொண்டிருந்தனர். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டுக்குள் அனைத்து பொருட்களும் சிதறி கிடந்ததை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம், 2 பவுன் நகைகள் மற்றும் 6 தங்க காசுகளை காணவில்லை.
இதுதொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவன், மனைவி 2 பேரும் தையல் கடையில் இருந்ததையும், வீடு பூட்டாமல் கிடப்பதையும் பார்த்த மர்ம நபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. எனவே அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story