காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கழுத்தை அறுத்து கணவர் தற்கொலைக்கு முயற்சி


காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கழுத்தை அறுத்து கணவர் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 13 April 2021 7:11 PM GMT (Updated: 13 April 2021 7:11 PM GMT)

வேறு ஒரு வாலிபருடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவருடைய கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, ஏப்.
வேறு ஒரு வாலிபருடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால்  காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவருடைய கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலித்து திருமணம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த உமாதேவி (19) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டினரும் சம்மதிக்கவில்லை.
எனவே அவர்கள் மதுரைக்கு வந்து ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
மேலும் உமாதேவி அந்த பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும் ேவறு ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் உமாதேவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த பாலகிருஷ்ணன் அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
எனவே பாலகிருஷ்ணன் அந்த வீட்டை காலி செய்து விட்டு லட்சுமிபுரம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடிபுகுந்தார்.
மனைவி தற்கொலை
இருந்தாலும் உமாதேவி அந்த நபருடன் அடிக்கடி செல்போனில் பேசுவது தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலை மனைவியை அவர் வேலை பார்க்கும் கடைக்கு சென்று சத்தம் போட்டுள்ளார். அனைவரின் முன்னிலையில் தன்னை கணவர் கண்டித்தது உமாதேவியை மனவருத்தம் அடையச் செய்தது. அன்று இரவில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் பாலகிருஷ்ணன் கோபித்து கொண்டு வீட்டின் முன்புள்ள அறையில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவு நேரத்தில் உமாதேவி படுத்திருந்த உள்அறையில் இருந்து நாற்காலி உருண்டு விழும் சத்தம் கேட்டது. இதனால் பதறி எழுந்த பாலகிருஷ்ணன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு உமாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கழுத்தை அறுத்துக்கொண்டார்
பின்னர் அவர் அங்கிருந்த இரும்பு உளியால் தனது உடல் மற்றும் கழுத்தை அறுத்து கொண்டார். 
உமாதேவி தற்கொலை செய்துகொண்டது மற்றும் தான் உளியால் கழுத்தை அறுத்துக் கொண்டது குறித்து தனது நண்பர்களுக்கு பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது மனைவியை கட்டிபிடித்த நிலையில் பாலகிருஷ்ணன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
தற்கொலை செய்து கொண்ட உமாதேவியின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story