வாக்குப்பதிவு எந்திர அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடைபட்டதால் பரபரப்பு


வாக்குப்பதிவு எந்திர அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடைபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 12:33 PM GMT (Updated: 14 April 2021 12:33 PM GMT)

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர அறை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, 

காஞ்சீபுரத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, பொன்னேரிக்கரை, செவிலிமெடு பஸ் நிலையம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என்று மழை பெய்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், ஆலந்தூர் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணித்து வரும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது. அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாவது தடைபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 3 நிமிடத்துக்கு பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சரிவர தெரிய ஆரம்பித்தன.

Next Story