நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 April 2021 3:22 PM GMT (Updated: 14 April 2021 3:22 PM GMT)

நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம், 

நாகையில் சுனாமி பாதிப்புக்கு பிறகு மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்த மீனவர்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும், ஆரியநாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மாலை 6 மணி அளவில் நாகை நகர பகுதியில் சென்ற மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை பார்க்க வந்தவர்களையும் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தனர்.

சாலை மறியல்

இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது. எனவே போலீசாரை கண்டித்து நாகை புதிய நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 நாட்களில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அருகில் உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story