வலங்கைமான் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்


வலங்கைமான் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
x
தினத்தந்தி 16 April 2021 1:10 PM GMT (Updated: 16 April 2021 1:10 PM GMT)

வலங்கைமான் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மரவெட்டிதெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருைடய மனைவி சாந்தி(வயது45). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மகாமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நடுநாராசம் ரோடு வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதில் ஒருவர் கீேழு இறங்கி திடீரென சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார்.

உடனே சாந்தி சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். இதைக்கேட்டு அங்கு திரண்ட மக்கள் சங்கிலியை பறிக்க முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். இருப்பினும் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

தவறவிட்ட கைப்பை

அப்போது அவர் கைப்பை ஒன்றை தவறவிட்டு சென்றார். இதை கண்டெடுத்த பொதுமக்கள் வலங்கைமான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த பையில் உடைந்த நிலையில் இருந்த ஆதார் அட்டை மற்றும் சில பொருட்கள் இருந்தன. இது குறித்து சாந்தியின் கணவர் ஜெயபால் வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறிக்க முயன்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். 

Next Story