பள்ளிக்கூட சுற்றுச்சுவரை உடைத்து காட்டு யானை அட்டகாசம்


பள்ளிக்கூட சுற்றுச்சுவரை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 16 April 2021 2:49 PM GMT (Updated: 16 April 2021 2:49 PM GMT)

கூடலூர் தொரப்பள்ளியில் அரசு பள்ளிக்கூட சுற்றுச்சுவரை காட்டு யானை உடைத்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து கடையையும் சேதப்படுத்தியதால் வியாபாரிகள் பீதியடைந்து உள்ளனர்.

கூடலூர்

கூடலூர் தொரப்பள்ளியில் அரசு பள்ளிக்கூட சுற்றுச்சுவரை காட்டு யானை உடைத்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து கடையையும் சேதப்படுத்தியதால் வியாபாரிகள் பீதியடைந்து உள்ளனர்.

காட்டு யானை அட்டகாசம் 

கூடலூர் தொரப்பள்ளி பஜாருக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு 9 மணிக்கு ஒரு காட்டு யானை அந்த பகுதிக்கு புகுந்தது. 

பின்னர் அந்த யானை. உணவு பதார்த்தங்கள் தயாரிக்கும் கடையை சேதப்படுத்தியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

 சிறிது நேரம் கடை முன்பு நின்றிருந்த காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுச்சுவர் தரைமட்டம் 

இந்த நிலையில் நள்ளிரவு அதே பகுதிக்கு மற்றொரு காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியின் சுற்றுச்சுவரை காட்டு யானை உடைத்து அட்டகாசம் செய்தது. 

தொடர்ந்து விடிய விடிய அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.  

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

தடுக்க வேண்டும் 

முதுமலை வனத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி பஜாருக்கு வந்து விடுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதேபோல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் என்ற நினைப்புடன் இருக்க வேண்டியதாக உள்ளது. 

எனவே வனத்துறையினர் ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

3 காட்டு யானைகள் புகுந்தன

ஊட்டி அருகே சோலூர் பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் தலைகுந்தா வழியாக காமராஜ் சாகர் அணையை ஒட்டிய பழைய மைசூர் சாலை பகுதிக்குள் நுழைந்தது. 

அத்துடன் அங்குள்ள ஒரு தோட்டத்தில் காய்கறி பயிர்களையும் சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

குறிப்பாக காட்டு யானைகள் மிதமான மற்றும் அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வாழும். உணவு, தண்ணீர் தேடி ஊட்டி அருகே புகுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story