பரமத்திவேலூர் அருகே அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது


பரமத்திவேலூர் அருகே அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2021 6:01 PM GMT (Updated: 22 April 2021 6:03 PM GMT)

பரமத்திவேலூர் அருகே அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது.

பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வடக்கு நல்லியாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அழகிகளை வைத்து விபசாரம் நடத்தப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தனிப்படை போலீசார் நேற்று விபசாரம் நடந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். 
அப்போது அந்த வீட்டுக்குள் விபசாரத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த 10 அழகிகள், உல்லாசம் அனுபவிக்க வந்த 2 ஆண்கள் மற்றும் விபசார புரோக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்கள், வீட்டில் விபசாரம் நடத்திய புரோக்கர்களான பரமத்திவேலூர் வடக்கு நல்லியாம்பாளையத்தை‌ சேர்ந்த சேகர் என்பவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 53), திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த சங்கர் (45), திருப்பத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஜோசப் (55) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 சிறையில் அடைப்பு

பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் பரமத்தியில் உள்ள குற்றவியல்  நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதியின் உத்தரவின் பேரில் சாமுண்டீஸ்வரி சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், புரோக்கர்கள் சங்கர், ஜோசப் மற்றும் வாடிக்கையாளர்கள் 2 பேர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 
மேலும் விபசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட 10 அழகிகளையும் பரமத்திவேலூர் போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story