பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 22 April 2021 8:17 PM GMT (Updated: 22 April 2021 8:17 PM GMT)

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர் கோனேரிபாளையம் பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் பெரம்பலூர் ராம்நகரை சேர்ந்த செந்தில்குமாரிடம், கல்குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றி செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளை விடுவிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் என்பவர் கடந்த 20-ந்தேதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் பால்ராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் பால்ராஜை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேற்று உத்தரவிட்டார்.

Next Story