பழனியில் தியேட்டர், கடைகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு


பழனியில் தியேட்டர், கடைகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2021 3:07 PM GMT (Updated: 23 April 2021 3:07 PM GMT)

பழனியில் உள்ள தியேட்டர், கடைகளில் சப்-கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டாா்.

பழனி:
பழனி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 30 என்ற அளவில் இருந்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற சுகாதாரத்துறை, போலீஸ் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று பழனி சப்-கலெக்டர் ஆனந்தி, பழனி நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஆர்.எப். சாலையில் உள்ள துணிக்கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்படுகிறதா என பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story