வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2021 7:08 PM GMT (Updated: 23 April 2021 7:08 PM GMT)

7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல்அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார்.

விருதுநகர், 
 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல்அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு அறை 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2,370 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள ஸ்ரீ வித்யா கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 
இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 வாக்கு எண்ணிக்கையின்போது ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 25 சுற்றுக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் தொகுதியில் தலா 26 சுற்றுக்களும், சிவகாசியில் 27 சுற்றுக்களும், விருதுநகர் தொகுதியில் 24 சுற்றுக்களும், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் தலா 23 சுற்றுக்களும் வாக்குஎண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேட்பாளர்களின் முகவர்கள் ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் தலா 19 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தலா 20 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் 
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர், முகவர்கள் கடைபிடிக்க விதிமுறைகள் பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெளிவாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு தன்மை குறித்தும், வேட்பாளர்களின் முகவர்கள் செல்லும் வழிகள் குறித்தும் மற்றும் வேட்பாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடி ஆய்வு செய்தார். 
 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.
ஏற்பாடுகள் 
மேலும் அரசு அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கிக்கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story