மராட்டியத்தில் விபரீதம் மது கிடைக்காததால் கிருமி நாசினி குடித்த 6 பேர் பலி


மராட்டியத்தில் விபரீதம் மது கிடைக்காததால் கிருமி நாசினி குடித்த 6 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2021 4:57 AM GMT (Updated: 25 April 2021 4:57 AM GMT)

மராட்டியத்தில் மதுபானம் கிடைக்காததால் கிருமி நாசினியை குடித்த 6 ேபர் உயிரிழந்தனர்.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கிய நேரத்தில், மதுபானம் கிடைக்காததால் கிருமி நாசினியை குடித்து பலர் உயிரிழந்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்தன. இந்தநிலையில் மராட்டியத்தில் தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் யவத்மால் மாவட்டத்தில் உள்ள வானி கிராமத்தில் 3 பேர் கையை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை குடித்து உயிரிழந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள் கிருமிநாசினியை குடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் அதே கிராமத்தில் மேலும் 3 பேர் கிருமிநாசினியை குடித்து உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த இவர்களுக்கு குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலே இறுதி சடங்கு நடத்தி விட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். மதுபானம் கிடைக்காமல் 6 பேர் கிருமிநாசினி குடித்து உயிரிழந்த விபரீத சம்பவம் யவத்மால் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story