வேலூர், அரக்கோணம் கோட்டத்தில்ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


வேலூர், அரக்கோணம்  கோட்டத்தில்ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 25 April 2021 2:13 PM GMT (Updated: 25 April 2021 2:13 PM GMT)

வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 63 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

முழு ஊரடங்கு அமல்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளது. வேலூர் கோட்டத்தில் 116 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பரவலை தடுக்கும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி நேற்று முன்தினம் வேலூர், அரக்கோணம் கோட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர்.

ரூ.8½ கோடிக்கு விற்பனை

அதனால் வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2½ கோடி மதுபானங்கள் கூடுதலாக விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.5 கோடியே 61 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.3 கோடியே 2 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது. மற்ற நாட்களில் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படும்.
வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டங்களில் நேற்று முன்தினம் மொத்தம் ரூ.8 கோடியே 63 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து கடைகளிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story