அம்மா உணவகங்களில் பார்சல் மூலம் உணவு வினியோகம்


அம்மா உணவகங்களில் பார்சல் மூலம் உணவு வினியோகம்
x
தினத்தந்தி 25 April 2021 10:43 PM GMT (Updated: 25 April 2021 10:43 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் பார்சல் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டது.

ஈரோடு
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், பெரும்பாலான ஓட்டல்கள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஆதரவின்றி சாலையோரம் வசிப்பவர்கள், வேலைக்காக விடுதியில் தனியாக தங்கி இருப்பவர்கள் உள்ளிட்டோர் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதேசமயம் ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்பட்ட அம்மா உணவகம் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அங்கு வழக்கம்போல் உணவுகள் தயார் செய்து பார்சல் மூலமாக வினியோகிக்கப்பட்டன. எனவே பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து உணவை வாங்கி சென்றார்கள். ஈரோடு காந்திஜிரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, சூளை, சூரம்பட்டி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, கொல்லம்பாளையம் உள்பட மொத்தம் 13 இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
இதேபோல் மற்ற உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டாலும், ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. அங்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் உணவு பார்சல் வழங்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு பலர் சாலையோரமாக தங்கி உள்ளார்கள். ஊரடங்கு காரணமாக அவர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் வாகனங்களில் வந்து உணவு வழங்கி சென்றனர்.

Next Story